Tuesday, May 19, 2009

நீசெய்த எல்லாத்தீமையும் மறந்து கண்ணீர் துளிர்கிறது மலையாய் இருந்த நீ வீழ்ந்திருப்பதைப்பார்த்து

இன்றய்தமிழர்களின் நிலையை அச்சொட்டாகச்சொல்கிறது இரயாகரனின் இந்த அலசல்.


அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

இதுவோ தமிழினம் மீதான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே அரங்கேறியுள்ளது. தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் வெற்றியாகவே, இதை அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பேரினவாதத்தின் முன்னால் இது வெறும் புலிகளின் மரணம் மட்டுமல்ல, தமிழ் இனத்தின் மரணமுமாகும்.

இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தின் மேலான இனவெறுப்பையும், அலட்சியத்தையும் அருவருக்கத்தக்க முறையில் பேரினவாதம் விதைக்கின்றது.

தமிழினமோ செய்வதறியாது கூனிக் குறுகி நிற்கின்றது. பயப்பீதியில் உறைந்து, நிலை தடுமாறுகின்றது. தனிமனிதரிடையே பழிவாங்கும் உணர்வு வன்மமாகி, கொப்பளிக்கின்றது.

மறுபக்கத்தில் தமிழினம் துயரமடைந்து நிற்கின்றது. துன்பம் தாங்காது அழுகின்றது. இந்த மரணங்கள் எதுவும் நடக்கவில்லை என்று நம்ப முனைகின்றது. மண்ணிலிருந்து புலம்பெயர் தமிழ் சமூகம் வரை, இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குள் தவிக்கின்றது. இது ஒரு இனத்தின் ஓலமாக எழுகின்றது.

தனிப்பட்ட ரீதியில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எனெனின் அது இனம் மீதான இனவழிப்பின் ஊடாகவே அரங்கேறியுள்ளது. தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் உணர்வு கொண்டவர்கள்; தான், இந்த மரணத்தில் மகிழ்ச்சி கொள்கின்றனர். அத்துடன் அரசியல் ரீதியாக அரசுடன் நிற்கின்றவர்கள், மகிழ்ச்சி வெள்ளத்தில் குதூகலிக்கின்றனர்.

ஆனால் தமிழ் சமூகம் இந்த மரணத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலை தான் எமது நிலையும் கூட. ஏன்?

தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையும், அதைத் தொடர்ந்து வந்த போராட்டத்தில் புலிகள் என்ற இயக்கம் உருவானது. இந்த இயக்கம் வலதுசாரிய அரசியல் அடிப்படையில், தனிமனித சர்வாதிகார அமைப்பை நிறுவியதுடன், அதை முழு சமூகம் மீதும் திணித்தது. அதற்காக அது பாசிச மாபியா என்ற அரசியல் வழியை தேர்ந்தெடுத்தது. இதை அது தமிழ் மக்கள் மேல் திணிக்க, தமிழ்மக்கள் மேலான பேரினவாத இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தான் உறுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. இதற்காகத்தான், பாசிச மாபியா என்ற அரசியலை செய்வதாக கூறிக்கொண்டது.

இந்த அடிப்படையில் தான், தமிழ் சமூகத்தை புலியின் பின் நிற்கவைத்தது. இயக்க அழிப்பின் பின், இதற்கு மாற்றாக மக்களை அணிதிரட்டக் கூடிய எந்த மாற்று சக்தியும், மக்களை அரசியலை முன்வைத்து மக்களுடன் நிற்கவில்லை. மாறாக அவை இலங்கை இந்தியக் கூலிக் குழுக்களாக மாறி, தமிழ் மக்களை ஒடுக்கத் தொடங்கியது.

தமிழ் மக்களோ தம் மீதான புலிகளின் ஒடுக்குமுறையை விடவும், அரசுடன் சேர்ந்து நின்று ஒடுக்கியவர்களை வெறுத்தனர். எதிரியுடன் நின்றவர்களை, ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்படி எதிரி பற்றி மக்கள் மதிப்பீடும், புலிகள் மேலான நம்பிக்கையீனங்கள் புலிகளை தனிமைப்படுத்திவிடவில்லை.

இதற்கு வெளியில் மாற்று என்று கூறிக்கொண்டவர்கள், எந்த மக்கள் அரசியலையும் முன் வைக்கவில்லை. மாறாக அரசியலற்ற இலக்கியம், மாற்று அரசியல் இன்மை என்று, தனிநபர்களின் சீரழிவுடன் கூடிய கொசிப்பு கோஸ்டியாக மாரடித்தது. உதிரியான தனிநபர்களின் எல்லைக்குள், மக்கள் அரசியல் எஞ்சிக் கிடந்தது.

இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் புலிக்கூடாகவே தேசியத்தைப் பார்த்தனர். பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைப் பார்த்தனர். தமிழ் மக்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைக் கண்டனர். இதற்குள்தான் தமிழ் மக்கள் மேலான புலிகளின் ஒடுக்குமுறையும் காணப்பட்டது.

ஒருபுறம் போராடும் புலி, மறுபக்கம் ஒடுக்கும் புலி. இதற்கு ஊடாகவே மக்கள் மத்தியில் புலி பற்றிய நம்பிக்கைகள், பிரமைகள், விரக்திகள், வெறுப்புகள், கோபங்கள் என்று எல்லா மனித உணர்வுகளும் உணர்ச்சிகளும் காணப்பட்டது.

புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தாங்களே என்று சொன்னார்கள். இதைவிட வேறு எதுவுமில்லாததால், தமிழ் மக்கள் இவர்கள் ஊடாகவே கடந்த 25 வருடமாக நன்மை தீமை என்று, அனைத்தையும் பார்த்தார்கள்.

இப்படி தமிழ்மக்கள் மரணித்துப் போன இந்த புலித் தலைவர்களின் கீழ் வாழ்ந்தார்கள். இதனால் அவர்களின் மரணத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இனவழிப்பு நடத்தி, தம் தலைவர்களை கொன்றதை அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை.

தம் இனத்தின் மேலான ஒரு இனவழிப்பு யுத்தத்தில், அவர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் புலிகளுடன் நின்றனர். அவர்கள் அரசுடன் சேர்ந்து நிற்கவில்லை. புலிகள் தமிழ் மக்களுடன் நிற்கா விட்டாலும், அவர்களுக்கு எதிராக செயற்பட்ட போதும், எதிரிக்கு எதிராக புலியுடன் நிற்கவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்த அரசியல் எதார்த்தத்தை நாம் அங்கீகரித்துதான் ஆகவேண்டும். மக்கள் நம்பிய அந்த தேசியத்துக்காக, துரோகம் செய்யாது புலித் தலைவர்கள் போராடி மடிந்துள்ளனர். இந்த மக்கள் அதற்குத்தான் தலைசாய்க்கின்றனர்.

நாம் இந்த எதார்த்தத்தை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் நாங்கள் இந்த எதார்த்தத்தின் பின்னால், வால்பிடித்து அங்கீகரித்து செல்ல முடியாதுள்ளது. ஏன்?

புலிகளின் தவறுகள் தான் தோல்வியாகியுள்ளது. புலிகளின் அரசியல் தான், இன்று தமிழ் மக்களை நடுரோட்டில் அரசியல் அனாதையாக்கியுள்ளது. மொத்தத்தில் தங்கள் தவறுகளை அவர்கள் கடுகளவு கூட சுயவிமர்சனம் செய்யவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கூட கோரவில்லை. இந்த நிலையில் நாம் அவர்களின் தவறுகளை அங்கீகரிக்க முடியாது. பொறுப்புள்ள வகையில் அதை சுட்டிக்காட்டி விழிப்புற வைப்பதன் மூலம் தான், மக்களின் எதிரியை வீழ்த்த முடியும். மீண்டும் அதே தவறுகளுடன் தமிழினம் பயணிக்க முடியாது.

இந்த தியாகமும், இந்த அவலமும் தவறான ஒரு அரசியல் வழிகாட்டலின் கீழ் நிகழ்ந்துள்ளது. எதிரி நண்பன் என்ற மக்கள் அரசியல் அடிப்படை இன்றி நிகழ்ந்துள்ளது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் எதிராகவே, இது தன்னை நிலைநாட்டிக் கொண்டது. அனைத்துவிதமான மக்கள் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் கூட இது மறுதலித்தது. தேசிய பொருளாதாரத்தை சிதைத்தது. பல ஆயிரம் அப்பாவிகளின் உயிர்களை காவு கொண்டது. தேசியத்துக்காக, மக்களின் உரிமைக்காக நின்றவர்களை கொன்று குவித்தது. ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் எதையெல்லாம் செய்யக் கூடாதோ, அதையெல்லாம் செய்துதான் அது தற்கொலை செய்து அழிந்தது.

இந்த விடையத்தை இன்று புரிந்துகொள்ள முடியாத எல்லையில் தமிழ் சமூகம், இந்த மரணத்துக்கு தலை சாய்க்கின்றது. நாங்கள் இதற்காக அல்ல. மாறாக எதிரியிடம் சரணடைந்து ஒரு துரோகத்தை செய்ய மறுத்து, தம் இலட்சியத்துக்காக இறுதிவரை போராடி மடிந்ததற்காக, புலியில் இருந்து ஒரு துரோகத்தை புலியின் பெயரால் இனி செய்ய முடியாத வண்ணம் தம் மரணம் மூலம் பதிலளித்த அந்த நேர்மைக்காக, நாங்கள் தலைவணங்குகின்றோம்.

இறந்தவர்கள் எம் எதிரி வர்க்கம் என்ற போதும், பிரதான எதிரிக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நின்ற அந்த தனித்தன்மை என்றும் மதிப்புக்குரியது. எல்லா வர்க்கத்தையும் தன் பின்னால் பலாத்காரமாக திரட்டிவைத்துக்கொண்டே, இந்த அரசியல் தற்கொலையை செய்துள்ளது. புலிகள் போராட்டத்தில் சரி, பிழை என்று கற்றுகொள்ள நிறைய விடையங்கள் உண்டு. புலிகளை எதிர்மறையில் உள்வாங்கி, அதை சமூகத்தின் முன் உடைத்துப் போடுவது அவசியமாகின்றது.

மக்களின் எதிரி, புலியை முன்னிறுத்தி தன்னை தூய்மைப்படுத்த முனைகின்றது. எல்லாம் புலிகளால் என்று சொல்ல முனைகின்றது. எல்லாம் பிரபாகரன் என்று காட்ட முனைகின்றது. எல்லா அரசியல் வேஷதாரிகளும்; இதற்குள் தான் புழுக்கின்றனர். நாம் இதைத் தெளிவாக மறுக்கின்றோம்;. இந்த இடத்தில் புலிகளின் தவறுகளை ஈவிரக்கமின்றி சரியாக இனம் காட்டி, எதிரியே இவை அனைத்துக்குமான அரசியல் காரணம் என்பதை அம்பலப்படுத்திப் போராட வேண்டியுள்ளது. எதிரிகள் பலர் என்பதால், இதற்கான உழைப்பு அதிகமானது. இதைச் செய்ய உங்களை தோழமையுடன் அழைக்கின்றோம்.

பி.இரயாகரன்
18.05.2009


இந்தக்கட்டுரை jkpo;Nrf;fps; இணையத்தளத்திலிருந்து நன்றியுடன் பெற்றுக்கொள்ளப்பட்டது

1 comments:

Anonymous said...

அடா இவன் எல்லாம் ஒரு ஆள் இவனுக்கு ஒரு கொள்கை என்று அவன் பதிவைப் போட்டிருகிறாய். சீலன் செத்துக்கிடந்தபோது இவன் தான் என்னை அடித்தவன் இவன் சாகவேண்டும் எனக் குழந்தைதனமாக பதிவிட்ட இந்தப் பச்சைப் பாலகன்
இப்போ கண்ணீர் வடிக்கின்றானமா?
போராட இவன் அழைகின்ற ஆட்கள் யார் ? எங்கிருக்கிறார்கள் அவர்கள்?இவன் என்ன போராட்டம் செய்யப் போகின்றான்? எங்கிருந்து? எல்லாவற்றையும் தான் ஒட்டு மொத்தமாக காட்டிகொடுத்துவிட்டார்களே இந்தப் பதிவாளர்கள். திருப்திப் பட்டுக் கொள்ளுங்கள். இன்னும் போதாதென்றால் பக்கத்தில் நிற்கும் தமிழனையும் கொல்லு. இனிக் கேட்கத்தான் ஆளில்லையே.

Loops solutions - Social media marketing in Sri lanka